Monday, February 2, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 17

1. பல்லிகளைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)

நூல் : புகாரி (3307)

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)

நூல் : புகாரி (3359)


முதல் அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளை மாத்திரம் இடம் பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு இப்ராஹிம் நபியவர்களுக்கு எதிராக பல்லிகள் நெருப்பை ஊதிவிட்டன என்ற செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

பல்லி தொடர்பான செய்தியை உம்மு ஷரீக்கிடமிருந்து சயீத் என்பார் அறிவிக்கிறார். சயீத் என்பாரிடமிருந்து அப்துல் ஹுமைத் என்பார் அறிவிக்கிறார். அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.

அப்துல்ஹுமைத் என்பவருக்கு சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் என்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜிடமிருந்து இப்னு வஹப், ரவ்ஹ், முஹம்மத் பின் பக்ர். அபூ ஆசிம் மற்றும் உபைதுல்லா ஆகிய ஐந்து நபர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஜுரைஜிற்கு ஐந்து மாணவர்கள் உள்ளனர்.

இவர்களில் உபைதுல்லாவைத் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாணவர்களும் இப்னு ஜரைஜிடமிருந்து இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தைக் கூறாமல் பல்லியைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதை மட்டுமே அறிவிக்கிறார்கள்.

உபைதுல்லாஹ் மட்டும் அந்த நான்கு நபர்களுக்கு மாற்றமாக இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தையும் சேர்த்து அறிவிக்கிறார். இப்னு வஹப் ரவ்ஹ் முஹம்மத் பின் பக்ர் மற்றும் அபூ ஆசிம் ஆகிய நான்கு நபர்கள் ஒரே மாதிரி அறிவிப்பதால் இவர்களுடைய அறிவிப்புத் தான் சரியான அறிவிப்பு. இவர்களுக்கு மாற்றமாக உபைதுல்லாஹ் மட்டும் தனித்து அறிவிப்பதால் இவரது அறிவிப்பு நிராகரிக்கப்பட வேண்டியது.

அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து இப்னு ஜ,ýரைஜ் மற்றும் சுஃப்யான் அறிவிப்பதாக முன்பே கூறினோம். சுஃப்யான் அவர்களும் அந்த நான்கு நபர்கள் அறிவிப்பதைப் போன்றே பல்லி நெருப்பை ஊதிவிட்ட தகவலைக் கூறாமல் அதைக் கொல்ல வேண்டும் என்பதை மட்டும் கூறுகிறார். உபைதுல்லாஹ் தான் நெருப்பை ஊதிவிட்டத் தகவலை தவறுதலாக கூறியுள்ளார் என்று இதன் மூலமும் புரிந்து கொள்ளலாம்.

உறுதிமிக்க நம்பகமானவர்கள் பலர் அறிவிக்கும் செய்திக்கு நம்பகமான ஒருவர் மாற்றமாக அறிவித்தால் அந்த ஒருவருடைய செய்திக்கு ஷாத் (பின்தள்ளப்பட்ட செய்தி) என்று ஹதீஸ் கûலியில் சொல்வார்கள். உறுதி மிக்கவர்கள் அறிவிக்கும் செய்தி மஹ்ஃபூள் (முன்னுரிமை தரப்பட்ட செய்தி) என்று சொல்லுவார்கள்.

இந்த அடிப்படையில் பல்லி நெருப்பை ஊதி விட்டது என்று உபைதுல்லாஹ் மட்டும் அறிவிக்கும் செய்தி பின்தள்ளப்பட்ட செய்தியாகும். எனவே புகாரியில் இடம்பெற்றிருக்கிதே என்றெல்லாம் குருட்டுத்தனமாக பேசாமல் இந்த ஹதீஸ் கலை விதிக்கு கட்டுப்பட்டு நடப்பதே அறிவாளிகளின் வழியாகும்.

ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலக அறிவிக்கப்பட்ட செய்தியின் உண்மை நிலை

பல்லி நெருப்பபை ஊதிவிட்ட சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்களின் வீட்டில் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் தாயே இதை (இந்த ஈட்டியை) வைத்து தாங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதை வைத்து நாங்கள் பல்லிகளைக் கொல்வோம். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இவ்வாறு) சொன்னார்கள். இப்ராஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் போடப்பட்ட போது பல்லியைத் தவிர பூமியிலிருந்த எல்லா உயிரினமும் நெருப்பை வாயால் ஊதி அனைத்தது. ஆனால் பல்லி மாத்திரம் அவர்களுக்கு எதிராக (நெருப்பை) ஊதிவிட்டது. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கொல்லும்படி கட்டளையிட்டார்கள் என்று ஆயிஷா கூறினார்.

அறிவிப்பவர் : சாயிபா

நூல் : இப்னு மாஜா (3222)


இதே செய்தி அஹ்மதில் (23393) (24643) (23636) ஆகிய எண்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்தச் செய்தியை அறிவிக்கும் சாயிபா என்ற பெண்மனியின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இவர் நம்பகமானவர் தான் என்று இப்னு ஹிப்பானைத் தவிர வேறுயாரும் சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பான் அறியப்படாத ஆட்களுக்கெல்லாம் நம்பகமானவர் என்று சான்றுதரக் கூடியவர் என்பதால் அவருடைய கூற்றை ஆதாரமாக எடுக்கலாகாது. எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வருமாறு ஹதீஸ் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை நீங்கள் கொல்லுங்கள். ஏனென்றால் அது இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது. ஆயிஷா (ரலி) அவர்கள் பல்லிகளை கொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று (உர்வா என்ற அறிவிப்பாளர்) கூறியுள்ளார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் (24463)


இந்த ஹதீஸில் சாயிபா இடம்பெறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின்அப்திர் ரஹ்மான் என்ற நபர் இடம்பெறுகிறார். இவரது நம்பகத்தன்மைûயும் யாராலும் நிரூபிக்கப்படவில்லை. இவர் யாரென்றும் தெரியவில்லை. எனவே இந்த செய்திக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நெருப்பை ஊதிவிட்டதற்காக பல்லியை கொல்ல வேண்டுமென்றால் மற்ற மற்ற உயிரினங்கள் நெருப்பை அனைத்திருக்கிறது. எனவே பல்லியைத் தவிர உள்ள வேறெந்த விஷ ஜந்துக்களையும் கொல்லக்கூடாது என்று சொல்லமுடியுமா? ஒரு உயிரைக் கொல்லுவதற்கு இப்படிப்பட்ட மோசமான அளவுகோலை நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக சொல்லவே மாட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் சரியான ஹதீஸ்

பல்லி தீங்கிழைக்கக் கூடியது என்பதைத் தவிர வேறெதையும் பல்லி சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை. பல்லியை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதை கூட ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்காதபோது பல்லியை கொல்வதற்கான காரணத்தை நபியவர்களிடமிருந்து கேட்பதற்கு அறவே வாய்ப்பில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :பல்லி தீங்கிழைக்கக் கூடியது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (1831)

ஆகையால் இப்ராஹிம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது என்ற கருத்தை நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களும் சொல்லவில்லை. உம்மு ஷரீக் (ரலி) அவர்களும் சொல்லவில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிவிட்டது.


தீமைதரக்கூடிய உயிரிகளைக் கொல்லலாம்


மேற்கண்ட ஹதீஸை நாம் மறுப்பதால் பல்லியை கொல்லக்கூடாது என்று கூறுவதாக விளங்கிக்கொள்ளக் கூடாது. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டதால் தான் பல்லியை கொல்ல வேண்டும் என்ற தவறான காரணத்தை தான் மறுக்கிறோம். பல்லி தீங்கு தரக்கூடிய உயிரினம் என்ற அடிப்படையில் அதைக் கொல்லலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பல்லியை கொல்லும்படி கட்டளையிட்டார்கள். அதற்கு ஃபுவைசிக் (தீங்குதரக்கூடிய மோசமான உயிரி) என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ்

நூல் : முஸ்லிம் (4154)


நபி (ஸல்) அவர்கள் பல்லிக்கு மட்டும் இவ்வாறு கூறவில்லை. மாறாக இன்னும் சில உயிரினங்களையும் பல்லியைப் போன்று தீங்குதரக்கூடியவைகள் என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும். அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை. அவை காகம் பருந்து தேள் எலி வெறிநாய் ஆகியனவாகும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (1826)

8. விவசாயம் செய்தால் இழிவு வருமா?


அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள் இந்தக் கருவி ஒரு சமூகத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்

நூல் : புகாரி (2321)


விவசாயம் செய்தால் அல்லாஹ் இழிவைத் தருவான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் குர்ஆனும் ஹதீஸும் விவசாயத்தை புகழ்ந்து சொல்கிறது. அதில் ஈடுபட்டு நல்லகாரியங்களை செய்யுமாறு ஆர்வமூட்டுகிறது.

படிப்பினைகளைத் தருகின்ற விவசாயம்

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப் பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

அல்குர்ஆன் (56 : 63)

அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

அல்குர்ஆன் (16 : 11)

"வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

அல்குர்ஆன் (32 : 27)

அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.

அல்குர்ஆன் (39 : 21)

இரண்டு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அவர்களில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அவ்விரண்டுக்கும் பேரீச்சை மரங்களால் வேலி அமைத்து, அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் ஏற்படுத்தினோம்.

அல்குர்ஆன் (18 : 32)


அல்லாஹ் மனிதர்களுக்கு புரிந்த பாக்கியங்களில் ஒன்றாக விவசாயத்தை குறிப்பிடுகிறான். விவசாயத்தில் பல படிப்பனைகளையும் வைத்திருக்கிறான். இருவருக்கு தோட்டங்களையும் பயிர்களையும் வழங்கி அருள்புரிந்திருக்கிறான். அல்லாஹ்வால் புகழ்ந்து சொல்லப்படும் விவசாயத்தை செய்தால் இழிவு வரும் என்று நம்புவது மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு எதிரானதாகும்.

நிலையான தர்மம்


இன்னும் நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரிச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம் இந்த பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை ஒரு முஸ்லிம் தான் (நட்டுவைத்தார்) என்று விடையளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது ஏதேனும் ஒன்றோ உண்டால் அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3160)


இதைப் போன்ற ஹதீஸ் புகாரியில் (2320) என்ற எண்ணில் இடம்பெற்றுள்ளது. நாம் செய்த விவசாயத்தின் மூலம் யாராவது பயன்பற்றால் அதன் மூலம் நாம் இறந்தப் பிறகும் கூட நமக்கு நன்மைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இதனால் தான் மறுமைநாள் வந்துவிட்டாலும் இந்த நல்ல செயலை செய்யமுடிந்தால் உடனே செய்துவிடவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : அஹ்மத் (12512)


 நிலையான தர்மத்தை பெற்றுத்தரும் இத்தொழில் இழிவைத் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.

பொருந்தாத விளக்கம்


மேற்கண்ட ஹதீஸை சரிகாணுபவர்கள் இதன் நேரடிப்பொருளை விட்டு விட்டு பொருந்தாத வேறொரு விளக்கத்தை இதற்கு கூறுகிறார்கள். பிற்காலத்தில் ஆட்சியாளர்கள் விவசாயிகளின் மீது பல வரிகளை இட்டு அவர்களை பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துவார்கள் என்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

சிறந்த தொழிலான விவசாயத்தை செய்யும் விவசாயிகள் பிற்காலத்தில் அடையவிருக்கும் கஷ்டத்தை முன்னரிவிப்பாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமேத் தவிர விவசாயத்தை பழிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

இவர்கள் கூறும் இந்த விளக்கம் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த ஹதீஸ் இந்த அர்தத்தைத் தரவே இல்லை. இவர்கள் இந்த விளக்கத்தை கூறுவதற்கு முன்பே இப்படி ஒரு விளக்கம் இந்த ஹதீஸிற்கு சொல்லப்படுகிறது என்று நமக்குத் தெரியும். இந்த விளக்கம் மட்டுமில்லாமல் எந்த விளக்கமும் பொருந்தவில்லை என்பதால் தான் இந்த ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு நாம் வந்தோம். இந்த விளக்கம் பலகாரணங்களால் தவறானதாகும்.

ஒரு ஹதீஸிற்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால் இன்னொரு ஹதீஸை வைத்தோ அல்லது குர்ஆன் வசனத்தை வைத்தோ விளக்கம் கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் இந்த விளக்கத்திற்கு எந்த ஆதாரத்தையும் காட்டாமல் இவர்களாக ஒன்றை கற்பணை செய்துகொண்டு அது தான் இதன் விளக்கம் என்கிறார்கள்.

விவசாயிகள் வரிகேட்டு கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று குர்ஆன் ஹதீஸில் தெளிவாகவோ மறைமுகமாகவோ எங்கும் கூறப்படாததால் இந்தக் கற்பணையை இதற்குரிய விளக்கமாக எடுக்கமுடியாது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இழிவு ஏற்படும் என்று ஹதீஸில் சொல்லப்பட்டிருந்தால் கூட இந்த விளக்கத்தை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்த விதமான காலவரையரையும் சொல்லப்படாமல் விவசாயக் கருவி இருக்கும் காலமெல்லாம் அங்கு இழிவு இருக்கும் என்று எல்லாக்காலத்திற்கும் பொருந்துமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் வரும் அபூ உமாமா என்ற நபித்தோழர் சில விவசாயக் கருவிகளை பார்த்தபோது இந்த ஹதீஸை அறிவிக்கிறார். பின்னொரு காலத்தில் விவசாயிகள் சிரமப்படுத்தப்படுவார்கள் என்பது இதன் விளக்கமாக இருந்தால் தன் காலத்தில் இருக்கும் விவசாயக் கருவிகளுக்கு இந்த ஹதீஸை அவர் பொருத்தியிருக்க மாட்டார். விவசாயக் கருவிகளை எப்போது பயன்படுத்தினாலும் அப்போது இழிவு வரும் என்பதையே அபூ உமாமாவின் செயல் உணர்த்துகிறது.

இதே ஹதீஸ் இமாம் தப்ரானீ அவர்கள் தொகுத்த முஸ்னது ஷாமிய்யீன் என்ற நூலில் கூடுதலான சில வாசகங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அபூ உமாமா (ரலி) அவர்கள் கலப்பையையும் இன்னும் சில விவசாயக் கருவிகளையும் பார்த்த போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக்கருவிகள் எந்த ஒரு கூட்டத்தாரின் வீட்டில் நுழைந்தாலும் அவர்கள் தங்களுக்குத் தானே இழிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதில்லை. அந்த இழிவு மறுமைநாள் வரைக்கும் அவர்களை விட்டும் அகலாது.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்

நூல் : முஸ்னது ஷாமிய்யீன் பாகம் : 2 பக்கம் : 6 ஹதீஸ் எண் : 816


விவசாயக் கருவி வீட்டில் இருந்தால் கியாமத் நாள் வரைக்கும் இழிவு நீடிக்கும் என்று இந்த செய்தி கூறுகிறது. ஒருகாலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வை இது குறிப்பதாக இருந்தால் கியாமத் நாள் வரை இழிவு நீடிக்கும் என்று சொல்லப்படாது. மறுமை நாள் வரைக்கும் இழிவு நீடிக்கும் என்று ஹதீஸில் சொல்லப்படுவதால் கியாமத் நாள் வரைக்கும் விவசாயிகள் கொடுமைப்படுத்தப் படுவார்கள் என்று தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு அரசு விவசாயிகள் மேலோங்குவதற்காக பல மானியங்களைத் தருகிறது. கடன்களை தள்ளுபடி செய்கிறது. எனவே விவசாயிகள் எல்லா நேரங்களிலும் சிரமத்திற்குள்ளாவார்கள் என்ற விளக்கம் பொருந்தாத விளக்கம்.

பொதுவாக எந்தத் தொழிலையும் ஒருவன் திறன்பட செய்தாலும் அதில் அவன் சிறந்த முன்னேற்றத்தை அடைவான். இந்த அடிப்படையில் விவசாயத்தில் தங்களது முயற்சியை செலவழித்தவர்கள் நல்ல பலனை அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இழிவு வரவில்லை. மாறக செல்வம் தான் வருகிறது.

எனவே இது போன்ற பொருந்தாத விளக்கங்களை விட்டு விட்டு குர்ஆனிற்கு மாற்றமானக் கருத்தை தரும் இந்த ஹதீஸை புறக்கணிப்பதே இஸ்லாமியக் கொள்கைக்கு பாதுகாப்பானதாகும்.


தாங்கள் கூறிய கற்பணைக் கதைதான் இதற்கு விளக்கம் என்று முரண்டுபிடித்தால் அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. விவசாயம் செய்தால் இழிவு வரும் என்றக் கருத்தை நாம் மறுப்பதைப் போல் இவர்களும் மறுக்கத்தான் செய்கிறார்கள். நாம் தெளிவாக மறுக்கிறோம். இவர்கள் ஹதீஸை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறிக்கொண்டு மறுக்கிறார்கள். இது தான் வித்தியாசம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner