Saturday, December 27, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 10

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மதம் மாறிவிட்டவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டுமா?


இஸ்லாத்தில் இருந்து கொண்டே புரட்சி செய்பவர்களுக்குத் தான் மரண தன்டனை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் நிரூபணம் செய்கிறது. தனது தீனை மாற்றிக் கொண்டவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸ் மதம் மாறியவர்களைக் குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் மதம் மாறிய அனைவரையும் குறிக்காது.

இஸ்லாத்தை விட்டு வேறொரு மதத்திற்குச் செல்பவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று மதம் மாறியதோடு யாருக்கும் எந்த இடையூறும் தராமல் தனது கொள்கையில் இருந்து கொள்பவர்கள்.

இரண்டாவது வகையினர் மதம் மாறியதோடு இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள். இரண்டாவது வகையைச் சார்ந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : நஸயீ (3980)


இஸ்லாத்தை விட்டும் வெளியேறியதோடு இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவனைத் தான் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாமல் தான் விரும்பிய கொள்கையில் யாருக்கும் எந்த இடையூரையும் ஏற்படுத்தாமல் வாழுபவன் இந்த ஹதீஸீல் சொல்லப்பட்ட மூன்று நபர்களுள் அடங்க மாட்டான்.

இந்த மூன்று நபர்களைத் தவிர வேறு யாரையும் கொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இப்பட்டியலில் அடங்காத ஒருவனைக் கொலை செய்வது எப்படி நியாயம்? இதற்குப் பிறகும் மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினால் அநியாயமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இச்சட்டத்தைக் கூறிய இவர்கள் கொல்லப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறிய மூன்றாவது நபரைப் பற்றி அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். நபியவர்கள் அவனுக்குக் கூறிய அதே தண்டனையைத் தான் அல்லாஹ்வும் கூறுகிறான்.

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் (5 : 33)


மதம் மாறியவர்களைப் பற்றி பல இடங்களில் பேசிய இறைவன் அங்கெல்லாம் இந்தத் தண்டனையைப் பற்றிப் பேசவில்லை. மாறாக மதம் மாற்றியவர்களைப் பற்றி இங்கு பேசாமல் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்பவர்களைப் பற்றி பேசுகின்ற இந்த இடத்தில் தான் மரணதண்டனையைக் கூறுகிறான். மதம் மாறாமல் தன்னை இஸ்லாமியன் என்று சொல்லிக் கொண்டே ஒருவன் எதிர்த்தாலும் அவனையும் கொல்லும்படித் தான் இஸ்லாம் கூறுகிறது.

மதம் மாறியவன் மதம் மாறாதவன் என்று பாகுபடுத்தாமல் எதிரியாக மாறுபவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இதிலிருந்து எதிராகச் செயல்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுமே தவிர மதம் மாறிவிட்டான் என்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கை கால்களை வெட்ட வேண்டும் என்று இந்த வசனம் கூறும் சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் உக்ல் என்ற கூட்டத்தாருக்குச் செயல்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்தினர் மதம் மாறியோதோடில்லாமல் பல மோசடித்தனங்களைச் செய்தார்கள்.


உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் பால்தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்) என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெட்பம்) ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். மேலும் ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர்) அவர்கள் ஹர்ரா பகுதியில் இருந்த போது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக மாறி விட்டனர். மேலும் நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்கு கொண்டு வரப்பட்ட போது) அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை கால்கள் வெட்டப்பட்டு ஹர்ரா பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டு போயினர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (4192)

நபி (ஸல்) அவர்களை ஏமாற்றி விட்டு மேய்ப்பவரையும் கொன்று விட்டு கால்நடைகளை திருடிச் சென்ற காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கொல்லும்படி சொன்னார்கள். இன்னும் இவர்கள் மனப்பூர்வமாக இஸ்லாத்திற்கு வரவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களை ஏமாற்றுவதற்காகத் தான் வந்தார்கள்.

இவர்களுடைய இந்த கொடிய செயலை அபூகிலாபா என்ற அறிவிப்பாளர் பின்வருமாறு கூறுகிறார்.

ஓர் உயிரை (அநியாயமாக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்து அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா என்ன?

அறிவிப்பவர் : அபூ கிலாபா

நூல் : புகாரி (4610)

இந்த உக்ல் குலத்தார் செய்ததை விட கொடிய செயல் வேறெது? அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு கொலையும் செய்துவிட்டு கொள்ளையடித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ கிலாபா

நூல் : புகாரி (6899)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்ற செய்தியை அபூகிலாபா அவர்களும் அறிவிக்கிறார்கள். இதைக் கூறிவிட்டு உக்ல் கோத்திரத்தாரின் நிகழ்வை அவர் கூறுகிறார்.

அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காகவே தவிர எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை என்று நான் கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு)

1.    மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு)கொலை செய்தவர். (அதற்குத் தண்டனையாக) அவர் கொல்லப்படுவார்.

2.    திருமணமான பின்னர் விபச்சாரம் புரிந்த மனிதர்.

3.    அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டவர்.

அறிவிப்பவர் : அபூகிலாபா

நூல் : புகாரி (6899)


குழப்பம் செய்பவர்களுக்கே தண்டனை


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக வேண்டுமென்றே இஸ்லாத்தைத் தழுவிட்டு பிறகு இறை நிராகரிப்பில் இணைந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் துன்புறுத்துவதை அவர்கள் நாடினார்கள்.

இவர்கள் இஸ்லாத்திற்கு வரும் போது மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. மாறாக இஸ்லாத்தை ஏற்றுவிடக் கூடாது என்று எண்ணிக்கொண்டே இஸ்லாத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக வந்தார்கள். இத்தகையோரைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

"நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்பட்டதை காலையில் நம்பி, மாலையில் மறுத்து விடுங்கள்! அப்போது தான் (மற்றவர்களும் அந்த மார்க்கத்திலிருந்து) விலகுவார்கள்'' என்று வேதமுடையோரில் ஒரு குழுவினர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (3 : 72)

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே! கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர்.

அல்குர்ஆன் (5 : 41)


(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் (3 : 176)


இவர்களுடைய இந்தக் குழப்பம் விளைவிக்கும் செயலைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தன் மார்க்கத்தை மாற்றியவனை கொல்லுங்கள் என்று கூறினார்கள் என்று விளங்கிக் கொண்டால் குர்ஆன் வசனத்தை வைத்து இந்த ஹதீஸை விளங்கிக் கொண்டதாக அமையும். மரண தண்டனை இவர்கள் செய்த குழப்பத்திற்கான தண்டனையே தவிர மதம் மாறியதற்கான தண்டனை அல்ல.

நபி (ஸல்) அவர்கள் யாரைக் கொல்லுமாறு கூறினார்களோ அவர்கள் உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றைக் காட்டிக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள். இந்த அடிப்படையில் குழப்பத்தை விளைவிக்கும் எண்ணத்தில் இஸ்லாத்தில் நுழைந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டுமே தவிர இந்தத் தவறான எண்ணத்தில் புகாமல் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிறகு மதம் மாறுபவர்களைக் கொல்வது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் வாழவில்லை. மாறாக நபியவர்களை விட்டும் பிரிந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்ட இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு போரிடுபவர்களாகத் தான் இருந்தார்கள்.

எனவே இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்குவார்கள். இஸ்லாமியர்களின் இரகசியங்களை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பார்கள் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொலை செய்யச் சொன்னார்கள்.

அதே நேரத்தில் இஸ்லாத்தைப் புறக்கணித்த நயவஞ்சகர்களைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. யார் யார் காஃபிர் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட அவர்கள் கொல்லவில்லை. ஏனென்றால் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவில்லை. ஏன் பலமுறை முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு இணை வைப்பாளர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்களுக்குத் தான் இந்தச் சட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னால் பல போர்கள் நடந்துள்ளன. இதுவெல்லாம் மதம் மாற்றத்தை அடிப்படையாக வைத்து நடக்கவில்லை. மாறாக முஸைலமா போன்றவர்கள் தங்களை நபி என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்தைச் சீர்குலைக்கத் திட்டம் தீட்டியதற்காகத் தான் நடைபெற்றது.

ஏகோபித்தக் கருத்தில்? ஏன் தடுமாற்றம்?


மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் கூட சில நேரங்களில் கொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.

ஒரு பெண் மதம் மாறிவிட்டால் அவளைக் கொல்லக் கூடாது என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த பல அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண் ஆயுதங்களைத் தூக்கி போர் செய்ய மாட்டாள் என்பதே இதற்குக் காரணம். இஸ்லாத்திற்கு ஒருவன் புதிதாக வந்து விட்ட சிறிது நாளில் மதம் மாறிவிட்டால் இவனுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கூறுபவர்கள் கூட இச்சட்டத்தைச் சிலருக்குப் பொருத்துகிறார்கள். சிலருக்குத் தளர்த்துகிறார்கள் என்பதே உண்மை. மதம் மாறியவரைக் கொல்ல வேண்டும் என்ற இந்தச் சட்டத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களும் இருக்கிறார்கள்.

நாம் மட்டும் இதை மறுக்கவில்லை. இமாம் சுஃப்யான் சவ்ரீ மற்றும் அந்நஹயீ ஆகிய இருவரும் மதம் மாறியவன் கொல்லப்படக் கூடாது. அவன் மரணிக்கும் வரை திருந்திக் கொள்ளும் படி அவனுக்குக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இக்காலத்து அறிஞர்கள் பலர் நம்மை விட இச்சட்டத்தைப் பலமாக மறுத்துள்ளார்கள்.

எதிர் வாதங்களும் முறையான பதில்களும்


மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர்க் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைச் சொல்கிறார்கள்.

விளக்கம் : 1

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம் யாருக்காக இறங்கியதோ அவர்களுக்கு மட்டும் தான் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் பொருந்தும் இந்த அடிப்படையில் இஸ்லாத்திற்குள் வராமல் இருப்பவரை இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திக்கக் கூடாது என்பதை மட்டும் தான் இந்த வசனம் சொல்கிறது. இஸ்லாத்திற்கு வந்து விட்டு மதம் மாறுபவனை நிர்பந்திக்கக் கூடாது என்று சொல்லவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை விளக்கும் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் அனைத்தும் மரணித்து விடும் போது தனக்கு பிறக்கின்ற குழந்தை உயிரோடு இருக்குமானால் அக்குழந்தையை யூதனாக மாற்றி விடுவேன் என்று (அறியாமைக் காலத்தில்) பெண் தன் மீது கடமையாக்கிக் கொள்பவளாக இருந்தாள். பனூ னளீர் என்ற (யூதக் கூட்டம் ஊரை விட்டும்) வெளியேற்றப்பட்ட போது அன்சாரிகளுடைய குழந்தைகளில் சிலரும் அதில் இருந்தார்கள். எனவே அன்சாரிகள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் (யூத மதத்தில்) விட்டு விட மாட்டோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்ற வசனத்தை இறக்கினான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவுத் (2307)


பிறப்பிலே யூதர்களாக இருந்தவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிற்பந்திக்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. இஸ்லாத்திற்கு வந்துவிட்டு மதம் மாறியவனை திரும்ப இஸ்லாத்திற்கு வருமாறு வற்புறுத்துவதற்குத் தடையாக வசனம் இறங்கவில்லை. எனவே மதம் மாறியவனை நிர்பந்திப்பதற்கு தடையாக இந்த வசனத்தைக் காட்ட முடியாது என்று கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

இவர்கள் விளங்கியிருப்பது முற்றிலும் தவறானது. ஒருவன் திருடும் போது தவறான காரியங்களில் ஈடுபடாதே என்று சொல்கிறோம். மறு நாள் அந்தத் திருடன் திருட்டை விட்டு விட்டு கொலையில் ஈடுபட்டு விட்டான். நாம் அவனிடம் நேற்றுத் தான் தவறான காரியங்களை செய்யாதே என்று உனக்குச் சொன்னேன் என்று கூறும் போது அவன் நான் திருடும் போது தான் இதைக் கூறினீர்கள். அதனால் நீங்கள் கூறிய வாசகம் திருடக் கூடாது என்பதை மட்டும் தான் காட்டும். கொலை செய்யக் கூடாது என்பதைக் குறிக்காது என்று கூறினால் அவன் கூறுவது சரியாகி விடுமா? இது போன்ற வாதம் தான் இது.

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று குர்ஆன் கூறினால் எந்த நிர்பந்தமும் இல்லை என்று விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர இந்த நிர்பந்தம் கூடும் அந்த நிர்பந்தம் கூடாது என்று பிரிப்பது அறிவீனம்.

பெண்களை நிர்பந்தமாக சொந்தமாக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த வசனம் இறங்குவதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியை அக்கணவனின் சொந்தக்காரர்கள் மணம் முடித்துக் கொள்வார்கள். அல்லது தாங்கள் விரும்பிய ஆட்களுக்கு மணமுடித்து வைப்பார்கள். இதைக் கண்டித்து இந்த வசனம் இறங்கியதாக புகாரியில் 4579 வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி கூறுகிறது.

கணவனை இழந்த பெண்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. எனவே திருமணமே செய்யாத பெண்னை நிர்பந்திப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று இவர்கள் விளங்குவார்களா? நிச்சயமாக அவ்வாறு எவரும் விளங்க மாட்டோம். மாறாக பெண்னை நிர்பந்திக்கக் கூடாது என்ற பொதுவான தடையை வைத்துக் கொண்டு எந்தப் பெண்னையும் எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றே விளங்குவோம். இது போன்று அமைந்த வசனம் தான் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம்.

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது என்று குர்ஆன் சொல்வதால் எதுவெல்லாம் நிர்பந்தமாகுமோ அவை அனைத்தும் கூடாது என்று சொல்வது தான் குர்ஆனைப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

விளக்கம் : 2

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறி அநியாயமாக அல்லாஹ்வுடைய பயமில்லாமல் சிறப்புமிக்க சூராவில் இடம்பெற்ற வசனத்தை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். இணை வைப்பவர்களிடத்தில் போர் புரியுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சொல்லி மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கிறது போர் புரியச் சொல்லும் இந்த வசனங்கள் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனத்தை மாற்றி விட்டது என்கின்றனர்.

நமது விளக்கம்

மனோஇச்சையைப் பின்பற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. குர்ஆனுடைய சட்டம் மாற்றப்படுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்ல வேண்டும். முரண்பாடில்லாத வசனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றை ஓரங்கட்டுவது முஸ்லிமிற்கு அழகானதல்ல.

நிர்பந்தம் கிடையாது என்று கூறும் வசனம் மாற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு அல்லாஹ் அடுத்த வரியிலே ஒரு காரணத்தையும் இணைத்துச் சொல்கிறான். அந்தக் காரணம் இருக்கும் போதெல்லாம் அந்தச் சட்டமும் நிலைத்திருக்கும்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)


இஸ்லாம் தெளிவான மார்க்கம் என்பதால் உண்மை எது பொய் எது என்பதைச் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இச்சட்டத்தை மாற்றிவிட்டு நிர்பந்தத்தை மார்க்கம் ஏற்படுத்தியதென்றால் தெளிவாக இருந்த இஸ்லாம் தெளிவை இழந்து விட்டது. அதனால் நிர்பந்திக்கச் சொல்கிறது என்று பொருள் வரும்.

நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மென்மேலும் தெளிவுபடுத்தப்பட்டதால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் மென்மேலும் வலுப்பெற்றது என்று தான் சொல்ல முடியும்.

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?

அல்குர்ஆன் (10 : 99)


எல்லோருக்கும் நேர்வழி காட்டுவதை அல்லாஹ் நாடவில்லை. அல்லாஹ்வே நாடாத போது நபியே நீ எப்படி நிர்பந்திப்பாய்? என்று அல்லாஹ் கேட்கிறான். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு இது போன்ற காரணம் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்று சொன்னால் அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட மாட்டான் என்ற விதியை மாற்றி எல்லோருக்கும் நான் நேர்வழி காட்டுவேன் என்று தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டான் என்று கூற வேண்டிய கட்டாயம். வரும்.

அதிகமான மக்கள் நேர்வழி இல்லாமல் மரணிப்பதை கண்ணால் பார்க்கக் கூடிய நாம் இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? எனவே காரணங்களோடு சொல்லப்பட்ட இந்த வசனம் மாற்றப்பட்டது என்று கூறுவது குர்ஆனை மறுத்த குற்றத்தில் நம்மைச் சேர்த்து விடும். அல்லாஹ் நம் அனைவரையும் இதை விட்டும் பாதுகாக்க வேண்டும்.

விளக்கம் : 3

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

"நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று (முஹம்மதே!) எச்சரிப்பீராக!

அல்குர்ஆன் (4 : 137)


மதம் மாறியவர்களைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை நாம் முன் வைத்தோம். எதிர்த் தரப்பினர்கள் இந்த வசனத்தின் பின்பகுதி நயவஞ்சகர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு சொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்கள் தான். மதம் மாறிகளைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. எனவே மதம் மாறிகளைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாக காட்டக் கூடாது என்கிறார்கள்.

நமது விளக்கம்

இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஏனென்றால் இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று நயவஞ்சகர்களைப் பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு நயவஞ்சகர்கள் (முனாஃபிகூன்) என்ற சூராவில் குறிப்பிடுகிறான்.

அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் (63 : 3)


எனவே இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கிறது என்பது சரி தான். இதனால் நாம் வைத்த வாதத்திற்கு இந்த வசனம் எப்படிப் பொருந்தாமல் போகும்.? நயவஞ்சகனாக இருப்பவன் மதம் மாறியாகவும் இருக்க முடியும். நயவஞ்சகர்களில் மதம் மாறியவர்களைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது.

இந்த நயவஞ்சகர்கள் ஈமான் கொண்டு பிறகு மறுத்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான். ஈமான் கொண்டு விட்டு பிறகு இறை நிராகரிப்பாளனாக மாறியவன் மதம் மாறியவன் என்பதில் இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதா?

மதம் மாறிகளைக் கொலை செய்யக் கூடாது என்பதற்கு நயவஞ்சகர்களை நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யாமல் விட்டதை முன்பே ஆதாரமாகக் காட்டினோம். நயவஞ்சகர்களைப் பற்றி இந்த வசனம் பேசுவதால் இது மதம் மாறிகளைக் குறிக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

இமாம் புகாரி அவர்கள் சஹீஹுல் புகாரியில் மதம் மாறிய ஆண் மதம் மாறிய பெண் தொடர்பான சட்டம் என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே பல வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். மதம் மாறிகளைப் பற்றி பேசவில்லை என்று எதிர்த் தரப்பினர் கூறிய மேலுள்ள வசனத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்கள். மதம் மாறிகளைக் குறிக்காத வசனத்தை சம்பந்தமில்லாமல் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள்.

நமது கருத்திற்கு இந்த ஒன்றை மட்டும் ஆதாரமாக வைக்கவில்லை. நாம் பல வசனங்களைக் கூறியிருக்கும் போது இந்த ஒன்றுக்கு மட்டும் தப்பான விளக்கத்தைக் கொடுத்து விட்டு மீத வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner